அமெரிக்கா, ஐரோப்பாவில் வர்த்தகம் அதிகரிப்பதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போரால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பின்னலாடை சில்லரை வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அக்., – நவ., மாதங்களை காட்டிலும், தற்போது சில்லரை வர்த்தகம், 10 சதவீதம் வரை உயர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இரு பெரும் கொரோனா தொற்று காலங்களில், அத்தியாவசிய தேவைகள் நீங்கலாக, மற்ற நடமாட்டத்தை உலக நாடுகள் அனுமதிக்கவில்லை. இதனால் அந்நாடுகளின் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்தன.
தொற்று ஊரடங்கு மத்தியில், வரலாறு காணாத அளவுக்கு வர்த்தகம் உயர்ந்தது. வளர்ந்த பொருளாதார நாடுகள் அளித்த சலுகையால், அந்நாட்டு நிறுவனங்களும், மக்களும், அடுத்து வரும் ஆண்டுகளுக்கான தேவைக்காக, கூடுதல் ஆர்டர்களை வாரிக் கொடுத்தனர். இரண்டாவது தொற்று காலத்தில், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிடங்குகளில் சரக்குகள் தேக்கமடைந்தன. சில்லரை வர்த்தகத்தில் சறுக்கல் ஏற்பட்டது.
உக்ரைன் போர்:
இக்கட்டான நிலையில் இருந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீண்டு வந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர், தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. மக்களின் இயல்பான நுகர்வு நிலையில் மாறுதல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில், சிக்கன நடவடிக்கை பின்பற்றப்பட்டது. எதிர்பாராதவிதமாக, அமெரிக்காவிலும் பணவீக்கம் ஏற்பட்டது. பிரிட்டனும், பணவீக்க பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
நாட்டின் பின்னலாடை தலைநகராக உள்ள திருப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளுடன், 70 சதவீத ஏற்றுமதி வர்த்தக தொடர்பு வைத்துள்ளது. அந்த நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, திருப்பூரில் எதிரொலிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகள், திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு சவால்களும், சறுக்கல்களும் நிறைந்ததாகவே கழிந்துள்ளன.
இருப்பினும், விடா முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் பெயர் பெற்ற திருப்பூர் தொழில் துறையினர், கடும் சவால்களை வெற்றிகரமாக சமாளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க சில்லரை வர்த்தகத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில்லரை வர்த்தக நிறுவன கிடங்குகளில், சரக்குகள் வேகமாக விற்றுத் தீர்கின்றன. உற்பத்தி நாடுகளில் தேங்கியிருந்த சரக்குகளும் வேகமாக நகரத் தொடங்கியுள்ளன. இதனால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, தங்கள் மகிழ்ச்சியான மனநிலையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.