சென்னை: பாண்டியன், மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ரயில்களைத் தொடர்ந்து, நெல்லை, பொதிகை எக்ஸ்ப்ரஸ் ரயில்களூம் இனி உயர் ரக எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதனை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
எல்எச்பி என்றால், லிங்க் ஹாப்மேன் புஸ் எனப்படும் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் உயர் ரக ரயில் பெட்டிகள். எல்எச்பி பெட்டிகள் எடை குறைந்தவை, வசதி மிக்கவை, பாதுகாப்பானவை, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கத் தகுதியானவை. தற்போது இந்தப் பெட்டிகள் பல்வேறு விரைவு ரயில்களில் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை – மதுரை இடையே இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை – திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப் படுகின்றன. இந்நிலையில் சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் எல்எச்பி பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்குள் இப்போதுள்ள பழைய பெட்டிகளுக்குப் பதிலாக எல்எச்பி பெட்டிகள் மாற்றப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.