சென்னை: தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் அரசு நிறுவனமாகவே டாஸ்மாக் திகழ்கிறது.
இன்றைய பட்ஜெட் குறித்து பலரும் கூறிய முன்னோட்டக் கருத்தும் டாஸ்மாக்கை ஒட்டியே இருந்தது. டாஸ்மாக் மூலமான வருமானம் இவ்வளவு, செலவு இவ்வளவு, துண்டு இவ்வளவு என்றுதான் பட்ஜெட் இருக்கும் என்று கேலி செய்யும் அளவுக்கு டாஸ்மாக் வருமானம் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நிலையில், பல டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டதாக பட்ஜெட்டில் ஓபிஎஸ் உரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு மட்டும் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2019-20ம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் வரவினம் ரூ.7 ஆயிரத்து 262.33 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
2018-19ம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் வரவினம் ரூ.6 ஆயிரத்து 724.38 கோடியாக இருந்ததாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.