இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வியாழன் இரவு, நாட்டின் நில அமைப்பை ஆராய்தல், எல்லையைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியது.
நாட்டின் புவிஅமைப்பு, எல்லைப் பகுதிகளைக் கண்காணித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு, இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையில் இஸ்ரோ நிறுவனம் ‘மைக்ரோசாட்-ஆர்’ என்ற ‘இமேஜிங்’ செயற்கைக்கோளை தயாரித்தது. 690 கிலோ எடையுடன் உள்ள இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பூமியை துல்லியமாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும். இது நாட்டின் எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்ய ராணுவத்துக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் தயாரானது. இதற்கான கவுண்ட் டவுன் வியாழன் அதிகாலை தொடங்கியது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஜன.24 வியாழன் இரவு 11.37க்கு பிஎஸ்எல்வி.-சி44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட 13 நிமி. 30 வினாடியில் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோளை 274.12 கி.மீ., தொலைவு புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.
இது ஒரு சாதனை என்று கருதப் படுகிறது. இதுவரை இஸ்ரோ ஏவிய செயற்கைக் கோள்களில், இதுவே குறைந்த தொலைவு புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்ட செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத் தக்க அம்சம்!
இந்த ஆண்டின் முதல் ராக்கெட் இதுதான். அதுவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி., வகையில், 46வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி.,-சி44 இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய முதல் ராக்கெட்!