புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், அந்தச் சட்டத்தின்படி நாகாலாந்து பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு ரூ.6.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அபராதத் தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது என்றும், இவ்வளவு அபராதம் கட்டும் அளவுக்கு மக்களை துன்புறுத்தக் கூடாது என்றும் குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பாஜக., ஆளும் மாநிலங்களே போர்க்கொடி தூக்கின. தொடர்ந்து அபராதத் தொகையை பாதியாகக் குறைத்தன.
இந்நிலையில், அபராதத் தொகை என்பது மத்திய அரசுக்கான வருவாய் பெறுவதற்கான வழி அல்ல; போக்குவரத்து விதிமீறல்களால் வரும் அபராதம் அந்த அந்த மாநிலங்களுக்கே செல்கிறது. மக்களுக்கு சட்டத்தின் மீது பயமும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடக் கூடாது என்ற எண்ணமும் தோன்றுவதற்காகத்தான் அபராதம் பன்மடங்கு அதிகரிக்கப் பட்டது. எனினும், இந்த அபராதத் தொகையைக் குறைப்பது குறித்து அந்தந்த மாநிலமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த நாகாலாந்தைச் சேர்ந்த லாரி ஒன்றை மறித்து சோதனை நடத்தினர். அதில், பெர்மிட் பெறாதது, காற்று மற்றும் ஒலி மாசுபாடு, போக்குவரத்து விதிகளை மதிக்காதது, சரக்கு ஏற்றும் லாரிகளில் மனிதர்களை ஏற்றியது, இன்சூரன்ஸ் பெறாதது மற்றும் ஜூலை 2014 முதல் வரி கட்டாதது உள்ளிட்ட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்துக்கும் புதிய மோட்டார் வாகனத் திருத்த சட்டத்தின் படி ரூ. 6,53,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகைக்கான ரசீதை லாரி உரிமையாளரிடம் போலீஸார் வழங்கினர். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.