தும்பிக்கையுடன் பிறந்த நாய்க் குட்டியைக் கண்டு அதிசயிக்கின்றனர் கிராமத்து மக்கள். ஆந்திரப் பிரதேசத்தில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இந்த விநோதம் நடந்துள்ளது!
‘பாலகொண்ட’ வீதியில் செங்கல் சூளை அருகில் நாய் ஒன்று அண்மையில் குட்டி போட்டது. அந்தக் குட்டிகளில் ஒரு குட்டி விசித்திரமான முகத்துடன் பிறந்துள்ளது.
அந்த நாய்க்குட்டியின் முகத்தில் மூக்குக்கு பதில் தும்பிக்கை உள்ளது. அதனால் அங்குள்ளவர்கள் நாய்க்கு யானைக்குட்டி பிறந்துவிட்டது என்று பரபரப்பாகப் பேசிக் கொண்டு சென்றார்கள்.
இதை அடுத்து நாய்க்குப் பிறந்த யானைக்குட்டியைக் காண வேண்டும் என்ற ஆவலில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் பெருமளவில் சாரிசாரியாக வந்து செல்கிறார்கள்.
ஆனால், அந்த நாய்க்குட்டிக்கோ, படு சிரமம். நீண்ட மூக்கு இருப்பதால் பால்குடிக்கக் கூட சிரமப்படுகிறது என்றும் அதனால் தாமே பால் குடிக்கச் செய்வதாகவும் உள்ளூர் மக்கள் உருக்கமுடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து விலங்கியல் மருத்துவர்கள் கூறிய போது, பிறவிக் கோளாறு காரணமாகவே நாய்க்குட்டி இது போன்ற வடிவில் பிறந்துள்ளது என்றனர். இதுபோன்று பிறக்கும் நாய்க்குட்டிகள் அதிக நாள் உயிரோடு இருக்காது என்றும் அவர்கள் வருத்ததுடன் தெரிவித்தனர் .
இந்த நாய்க்குட்டிக்கு இன்னமும் கண்கள் கூட முழுமையாக ஏற்படவில்லை. எனவே அதனால் சரியாக பார்க்க முடியவில்லை என்கிறார்கள். இந்த நாய்க்குட்டி குறித்த படங்களும் வீடியோவும் சமூகத் தளங்களில் ஆச்சரிய கரமானதாகவும் அதிசயமானதாகவும் கூறி பகிரப் பட்டு வருகின்றன.