தினமும் ஒரு டம்ளர் மோர் குடியுங்க…பிறகு பாருங்க… என்னல்லாம் நன்மைகள் நமக்கு கிடைக்குதுன்னு!
கோடையில் அடிக்கும் வெயிலில் நம் அனைவருக்குமே அடிக்கடி தாகம் எடுக்கும்தான். அதை சமாளிக்கவே பலரும் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருக்கிறோம்.. அதுவும் நம் உடனேயே!
சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள் மோர் கொண்டு போவார்கள். மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று அதன் பலன்கள் தெரியாமலேயே இதனை வாங்கிக் குடிப்பார்கள்.
இந்த மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?! வயிற்றை குளிர்ச்சியடையச் செய்ய… நீர்மோர் சிறந்தது.
நன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.
மதியம் வயிறு நிறைய சாப்பிட்டுள்ளீர்களா? அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படியெனில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இது வயிற்றைச் சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும். இதனால் தான் மோர் குடித்த பின்னர் வயிறு லேசானது போல் உணர்கிறோம்.
மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், நன்கு செரிமானம் ஆகும். வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, மோரைக் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களைச் சேர்த்து மோர் தயாரிக்கப் படுவதால், எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருக்கும். எனவே கோடையில் மோர் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவது தடுக்கப் படும்.
சிலருக்கு லாக்டோஸ் அலர்ஜி இருக்கும். அத்தகையவர்களால் பால் பொருட்கள் சாப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் கால்சியம் சத்து பெற, பால் பொருட்களைத் தவிர மற்ற உணவுப் பொருட்களை நாட வேண்டும். ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மோர் குடிக்கலாம். இதனால் அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது. இயற்கையான கால்சியத்தை மோரில் இருந்து பெறலாம்.
மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் பி – ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கச்செய்யவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் வெளியிட்ட அறிக்கையின் படி, மோரில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.
இவ்வளவு நன்மைகளையும் தரும் மோர்… சிறந்த விதத்தில் தயாரிப்பது எப்படி?!
தயிர் – 1/2 டம்ளர்
குளிர்ந்த நீர் – 1 டம்ளர்
உப்பு – தேவையான அளவு
மிளகு – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
கறிவேப்பிலை – 2-3 இலைகள்
கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை: மிக்ஸியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாட்டிலில் தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி, அதனை மூடி நன்கு குலுக்க வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை குலுக்கினால், மோர் தயார்!