மழை இல்லாததால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்து காணப் படுகிறது. அருவிக் கரையில் இன்று காலை முதலே நீர் குறைவாகவே காணப் பட்டது.
கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் நீர்வரத்து அதிகரித்து அருவிகளில் நீர் கொட்டியது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யாததால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இன்று காலை புளியரை, குண்டாறு, மேக்கரை, செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தும் அருவிகளில் அதிக நீர் விழவில்லை.
குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து தரக்கு கூடிய நீர் பிடிப்புப் பகுதிகளில் பெரும் மழை இல்லை. இதனால் அருவிகளுக்கு நீர் வரத்து இல்லாமல் போனது.
இருப்பினும், சீஸன் தொடங்கி விட்டதால், காற்று, இதமான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் குவிந்தது.
சுற்றுலா பயணிகள் அதிகம் இருந்த நிலையில் குறைந்த அளவே நீர் விழுந்ததால், அந்தக் குறைவான நீரில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று குளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாளை, நாளை மறு நாள் சனி, ஞாயிறு இரு தினங்களும் வார இறுதி என்பதால், மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப் படும். மழை பெய்தால் மட்டுமே அருவிகளில் நீர் அதிகரித்து சுற்றுலா பயணிகள் குதூகலிக்க வாய்ப்பு ஏற்படும்.