வாஷிங்டன்: ஒசாமா பின்லேடன் மகன் கொல்லப்பட்டதை உறுதி செய்தார் அதிபர் டிரம்ப்… சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சார்பில் அமெரிக்க அதிபர் மாளிகை சனிக்கிழமை காலை விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டது அல்கொய்தா அமைப்பிற்கு பின்னடவை மட்டுமின்றி, அந்த இயக்கத்திற்கும் பெருத்த சரிவை உண்டாக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த போது, பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. இதன் பின்னர் அல் கொய்தா இயக்கத்திற்கு பின் லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் தலைமை வகித்தார்.
30 வயதான அவர், அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுமாறு அல்கொய்தா அமைப்பினருக்கு ஆடியோ மூலம் செய்திகள் பரிமாறி வந்தார். இதனால் அவரது தலைக்கு ஒரு மில்லியன் டாலர்களை பரிசுத் தொகையாக அமெரிக்க அரசு அறிவித்து இருந்தது.
ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற விமான தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அறிவித்துள்ளது. பின்லேடனின் 20 குழந்தைகளில் ஹம்சா பின்லேடன் 15-வது குழந்தை ஆகும்.