சீனாவை உலுக்கி வரும், ‘கொரோனா’ வைரஸ் காரணமாக, ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.
சீனாவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், தென் கொரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை நான்கு பேர், வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், 556 பேர், வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வூஹான் நகருக்கு, சர்வதேச சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நிபுணர் குழு, நேற்று வந்து, ஆய்வு நடத்தியது.
வைரஸ் பீதி காரணமாக, பீஜிங் நகரில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டுள்ளன. திறந்திருக்கும் ஒரு சில ஓட்டல்களுக்கும், வாடிக்கையாளர்கள் வருவது இல்லை. இதனால், ஓட்டல் தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது..
ஜப்பானில், மன்னர் நருஹிட்டோவுக்கு, நேற்று( பிப்.,23), 60வது பிறந்த நாள். வழக்கமாக, மன்னரின் பிறந்த நாளன்று, ஜப்பான் முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டும். மன்னரின் அரண்மனைக்கு அருகில், ஏராளமானோர் திரண்டு நின்று, வாழ்த்து தெரிவிப்பர்.
கொரோனா பீதி காரணமாக, நேற்று மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எளிமையாகவே நடந்தன. அரண்மனை அருகே, மக்கள் கூடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது