இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க இளைஞர் ஒருவர் இந்து மதத்தை விமர்சித்து பதிவிட்ட பேஸ்புக் வீடியோ, தென் ஆப்ரிக்க இந்து மகா சபாவினரின் புகாருக்கு பின்னர் அகற்றப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகருக்கு தெற்கே இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் சாட்ஸ்வொர்த் பகுதியில் ஒரு சிறு கூட்டத்தினரிடையே சிமியோன் பிராட்லி ஷெட்டி என்ற நபர் இந்து மத நம்பிக்கைகளை விமர்சித்து பேசுகிறார்.
இவர் தன்னை தானே கிறிஸ்தவ மத போதகர் என கூறிக்கொண்டு இவ்வாறு பேசுகிறார். இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு பிற மதத்தவர்களின் கண்டனத்தையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்ரிக்க இந்து மகா சபா சார்பில் சார்பில் ஷெட்டி மற்றும் அவர் சம்பந்தப்பட்ட சர்ச்சுக்கு எதிராக முறையாக புகாரளித்தனர்.
அதன் பிறகு சர்ச்சைக்குரிய வீடியோ பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது. இது குறித்து தென் ஆப்ரிக்க இந்து மகா சபா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை திரும்ப பெற வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் யாரிடமிருந்தும் வந்தாலும் இந்துக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். என்று எச்சரிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு சமயத்தில் இது போன்று கூட்டம் நடத்திய ஷெட்டி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.