ஆப்கானிஸ்தானில் தனது கண்முன்னேயே பெற்றோர்களை கொலை செய்த தலிபான் பயங்கரவாதிகள் இருவரை ஏகே-47 துப்பாக்கி மூலம் 14 வயது பெண் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெற்காசியாவில் அதிக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. இங்குள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கோரல் மாகணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அரசுக்கு ஆதரவாக இருந்ததாக ஒருவரை தேடி அவரின் வீட்டிற்கு தலிபான் பயங்கரவாதிகள் கடந்த வாரம் சென்றுள்ளனர்.
ஆனால் அவர் வரமறுத்ததால் அவரை வெளியே இழுத்து வந்த பயங்கரவாதிகள் வீட்டின் முன்னர் அவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களின் 14 வயது மகள் கமர் குல், வீட்டில் இருந்த ஏ.கே 47 துப்பாக்கியை எடுத்து வந்து தனது பெற்றோரை கொன்ற இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளார். மேலும் அங்கு காவலுக்கு இருந்த பயங்கரவாதிகள் சிலரையும் காயப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் தலிபான்களை விரட்டியடித்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணையும் உறவினர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு ராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் பலரும் தலிபான்களை கண்டு அஞ்சி நடுங்கிவரும் நிலையில் தனி ஒரு பெண்ணாக தலிபான்களை எதிர்த்து நின்ற கமர் குல்லுக்கு அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.