கொரோனா பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
அமெரிக்காவில் அவரும் நவ.,3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை அடுத்து இருவரும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டனர். தொடர்ந்து, வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு, அங்கிருந்த படியே தனது அலுவலகப் பணிகளையும் கவனித்து வந்தார்.
பின்னர் 4 நாட்கள் சிகிச்சை முடிந்த நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார். ராணுவ மருத்துவமனையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகை வந்தார் டிரம்ப்.
அதிபர் டிரம்ப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர் கூறுகையில், ‛டிரம்புக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்பாக உள்ளது. ரெம்டெசிவர் மருந்து 5வது டோஸ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்குச் செல்லும் அளவு அவர் உடல் நலம் தேறிவிட்டார் என்று குறிப்பிட்டனர்.
தாம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னர் டுவிட்டரில் டிரம்ப் பதிவிட்ட தகவல்….
நான் இன்று (அமெரிக்க நேரப்படி) 6:30 மணிக்கு பெரிய வால்டர் ரீட் மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. கொரோனா குறித்து பயப்பட வேண்டாம்,’ என பதிவிட்டுள்ளார்.
ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகையை அடைந்த டிரம்ப், மாஸ்க்கை கழற்றினார். இந்தப் படங்களைப் பார்த்து விமர்சித்த அவருடைய போட்டியாளர் ஜோ பிடன், டிரம்பை தொடர்ந்து மாஸ்க் அணியுமாறு பதில் பதிவு செய்தார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு வெள்ளை மாளிகைக்கு திரும்பியதும், உடனடியாக ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அவருக்கு கோவிட் தொற்று நோய் இருந்தபோதிலும், 210,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொன்ற வைரஸுக்கு நாடு அஞ்சக்கூடாது என்று அறிவித்தார், பின்னர் அவர் பாதுகாப்பு முகக் கவசம் இல்லாமல் வெள்ளை மாளிகையில் நுழைந்தார்.
டிரம்பின் இந்த செய்தி தொற்று நோய் நிபுணர்களை எச்சரித்துள்ளது. அதிபருக்கு தொற்றிய நோய் மற்றும் சிரமங்கள், அவரை இந்த நோயைப் பற்றிய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய தூண்டவில்லை என்று குறிப்பிடப் படுகிறது. இது பல வெள்ளை மாளிகை உதவியாளர்களையும் பாதித்துள்ளது, திங்களன்று புதிதாக நோய்த் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை வெள்ளை மாளிகையில் அதிகரித்தே காணப் பட்டது.