சிலாகேப் (இந்தோனேசியா) இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலி நைன் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஆண்ட்ரூ சான், ஈழத் தமிழரான மயூரன் சுகுமாரன் இருவரும் பாலியின் கேரோபோகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை எழுப்பப் பட்டு, சில நிமிடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து அந்தத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை உள்ளூர் நீதி அமைச்சக அதிகாரி நியோமன் புத்ரா சூர்யா கூறியுள்ளார். அவர்கள் இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட இந்த மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்த போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் இரண்டு விமானங்களில் கொண்டு செல்லவுள்ளனர். போராட்டங்கள், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார், தண்ணீர் பாச்சும் வாகனங்கள், கவச வாகன ராணுவப் படைப் பிரிவினர் ஆகியோர், பாலியின் கெரோபொகான் சிறைச் சாலைக்கு வெளியில் பாதுகாப்புக்குக் குவிந்திருந்தனர். பாலி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் இருவரும் விமானம் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இந்தோனேசியாவின் மத்திய யாவா நுஸகம்பகன் தீவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். கடந்த 2005-ல் இந்தோனேசியாவிலிருந்து ஹெரோயின் போதைப் பொருள் கடந்த முயன்றதாக ஆண்ட்ரூ சான் மற்றும் சுகுமாரன் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. 2006ம் ஆண்டில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்கள் திருந்திவிட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்து, இருவருக்கும் கருணை காட்டுமாறு அரசிடம் கோரினர். அவர்களின் கருணை மனுக்களை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்தார். இந்நிலையில், அவர்களுக்கு அதற்கு மேல் வேறு சட்ட ரீதியான வாய்ப்புகள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள், ஆண்ட்ரூ சானையும் சுகுமாரனையும் விடுவிக்கும்படி இந்தோனேசியாவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை இந்தோனேசியா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களின் மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படவுள்ளது. (AFP செய்தியின் அடிப்படையில்)