இலங்கை சிவசேனை சார்பில் சிவசேனைத் துணைத் தலைவர் சிவ சிந்தையர் மாதவன் தலைமையில் ஐவர் குழு, இந்தியாவில் இருந்து வந்துள்ள தமிழ் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையை சந்தித்து
ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தது. அதில்,
சிவபூமியாம் இலங்கைக்கு வருகை தந்த உங்களை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கிறோம். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியும் அங்குள்ள இந்துக்களின் மலர்ச்சியும் இராமர் கோயில் அயோத்தியில் மீளமைத்தலும் காஷ்மீர் பண்டிட்கள் மீளமைப்பும் ஒரே நாடு ஒரே சட்டத்தை நோக்கிய இந்தியாவின் பயணமும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடிக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். அவர் எங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இந்துக்களாகிய நாங்கள் உயிர்களை கைப்பிடித்துக் கொண்டு இலங்கையில் இருக்கிறோம்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்குக் கூடுதலாக இலங்கைத் தீவு சிவ பூமியே. புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன் சிவபூமிக்கு வந்தார். அன்பு நெறியைப் பரப்பினார். போர்த்துக்கேயர் 500 ஆண்டுகளுக்கு முன் சிவபூமியில் கால்வைத்தனர். கத்தோலிக்க மதத்துக்கு வாள்முனையில் மதமாறினர். மறுத்த இந்து மன்னன் சங்கிலியனைப் போரில் கொன்றனர்.
முகம்மதியர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைத் தீவில் கால் வைத்தனர். ஆங்கிலேயர் அழைத்து வந்து அவர்களுக்கு ஊர்கள் தோறும் வணிக நிலையங்களை அமைத்துக் கொடுத்தனர். 66,000 சதுர கிலோமீட்டரும் சிவ பூமியாகிய இலங்கை, 1948இல் ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு அகலும் போது 25,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள சிவபூமியாகச் சுருங்கியது.
2022இல் 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வாழ்கிறோம். 100% ஆன இந்துக்களின் நிலப்பரப்பு 35% ஆனது. இன்று 20% ஆகியது. 100% இந்துக்கள் வாழ்ந்த சிவபூமி இலங்கையில் ஆங்கிலேயர் அகன்ற 1948இல் 25% ஆக இந்துக்கள் குறைந்தனர்.
2022இல் இலங்கையின் மக்கள் தொகையில் 12% இந்துக்களே வாழ்கின்றனர். இந்துக்கள் தொகையில் 100% ஆக இருந்தோம்.25% ஆகினோம். 12% ஆகிவிட்டோம். புத்தம் கிறித்துவம் முகமதியம் ஆகிய மூன்று மதத்தவரும் சைவர்களையே குறிவைக்கிறார்கள். மதம் மாற்றுவது சைவக் கோயில்களை ஆக்கிரமிப்பது இடிப்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது.
இருக்கிற 12% இந்துக்களையும் காப்பாற்ற வேண்டுமானால் இலங்கையில் இந்துக்களுக்கு எனத் தனியான மாகாணம் சிவபூமியாக அமைய வேண்டும். வடக்கு மாகாணம் கிழக்கு மாகாணம் மத்திய மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களில் உள்ள 12 மாவட்டங்களை உள்ளடக்கிய சிவபூமியாக இந்து மாகாணத்தை அமைத்துத் தருமாறு இந்தியாவை நாங்கள் கேட்கிறோம்.
இலங்கையில் இந்து மாகாணத்தை அமைத்த பின்பு அந்த இந்து மாகாணத்தைத் தொடர்ச்சியாக வைத்திருக்கும் ஏற்பாடுகளுக்கு இந்தியா உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இலங்கையில் எத்தகைய அரசியலமைப்பு வந்தாலும் அரசியலமைப்பில் இந்து சமயத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை இந்தியா இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
புத்தர்களைக் காக்க சீனா இருக்கிறது. நிதியாக அள்ளிக் கொடுக்கிறது.
கிறித்தவர்களை காக்க மேற்குலகம் இருக்கிறது. அண்மையில் நீதிகேட்டு கருதினால் இந்தியாவுக்கா வந்தார்? வத்திக்கானுக்குப் போனார். முகமதியர்களைக் காக்க அரேபிய உலகம் இருக்கிறது. காசாக பொருள்களாக அள்ளி அள்ளி வீசுகிறது. சதாம் உசேன் நகரையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இலங்கை இந்துக்களைக் காக்க எந்த நாடு இருக்கிறது? இந்தியாவைத் தவிர. பிரதமர் மோடியை தவிர வேறு யார் எங்களுக்குக் கைகொடுக்க இருக்கிறார்கள்?யாழ்ப்பாணத்துக்கு நீங்கள் வருகை தந்தமைக்கு மீண்டும் நன்றியை சொல்லி விடைபெறுகிறோம்… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.