உலகக் கோப்பை டி20 போட்டிகள் – இரண்டாவது அரையிறுதி ஆட்டம்
இந்தியா படுதோல்வி; பந்துவீச்சாளர்களின் மோசமான நாள்
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
உலகக் கோப்பை டி20 போட்டிகளின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அடிலெய்ட் மைதானத்தில் இன்று இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்றது.
இந்திய அணி (168/6, ஹார்திக் பாண்ட்யா 63, கோலி 50, ரோஹித் ஷர்மா 27, கிரிஸ் ஜோர்டன் 3/43) இங்கிலாந்து அணியிடம் (16 ஓவரில் விக்கட் இழப்பின்றி 170 ரன், ஜாஸ் பட்லர் 80, அலக்ஸ் ஹேல்ஸ் 86) 10 விக்கட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியின் முக்கிய அம்சம் இங்கிலாந்து அணி ஆடிய இரண்டாவது இன்னிங்கிஸ். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது.
ஹார்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 63 ரன் எடுத்தார். இதில் 5 சிக்சர்கள், 4 ஃபோர்கள். அடிலெய்ட் மைதானத்தில் 168 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான்
ஆனால் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தபோது அதன் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் (49 பந்துகளில் 80 ரன், 3 சிக்சர், 9 ஃபோர்) அலக்ஸ் ஹேல்ஸ் (47 பந்துகளில் 86 ரன், 7 சிக்சர், 4 ஃபோர்) இந்தியப் பந்து வீச்சாளர்களைப் பந்தாடினர்.
புவனேஷ்குமார், ஷமி, அஷ்வின், பாண்ட்யா ஆகிய பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு 11 ரன்னுக்கு மேல் கொடுத்தனர். அதனால் இங்கிலாந்து அணி எளிதாக 16 ஓவரிலேயே விக்கட் இழப்பின்றி 170 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இனி நவம்பர் 13ஆம் தேதியன்று இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மெல்போர்னில் இறுதி ஆட்டத்தில் விளையாடும்..