வாஷிங்டன்: இந்தியாவில் தற்போதுள்ள மத சகிப்புத் தன்மை நடவடிக்கைகள் குறித்து அறிந்தால், மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை தெரிவித்தார். அண்மையில் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத சகிப்புத் தன்மை குறித்து ஓரிரு வார்த்தைகள் பேசியிருந்தார். இது இந்தியாவில் எதிர்க்கட்சியினர் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. ஆளும் பாஜகவைக் குறிவைத்து, ஒபாமா இப்படிப் பேசியதாகக் கூறப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகை அதனை மறுத்திருந்தது. ஒபாமா, இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டுக்கும் பொதுவான ஜனநாயக மதிப்பு மற்றும் கொள்கைகள் குறித்தே பேசினார் என்று விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஒபாமா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது…. ”மிகவும் அழகான செழுமையான நாடான இந்தியாவில் இருந்து நானும் மிச்செலும் இப்போதுதான் திரும்பியிருக்கிறோம். முற்றிலும் வேறுபாடுகளைக் கொண்ட ஒரு நாடு. ஆனால், பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு இடமான அங்கு கடந்த சில வருடங்களாக, சில நேரங்களில் வேறு சில மத நம்பிக்கைகள் கொண்டவர்கள் மற்றவர்கள் தாக்கப்படுவது நடந்துள்ளது. தங்கள் பழைமையையும் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் தக்க வைக்க அவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றனர். இந்த மத சகிப்புத் தன்மையின் நிலை குறித்து அறிந்தால், அந்த தேசத்தின் விடுதலைக்கு உதவிய மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார்” என்று கூறியுள்ளார். வியாழக்கிழமை நேற்று அமெரிக்க அதிபர் மாளிகையில் மூவாயிரத்துக்கும் அதிகமான சர்வதேசப் பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த மாதம் 26ம் தேதியை ஒட்டி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார் ஒபாமா. குடியரச தின விழாவில் பங்கேற்ற பின்னர் 27-ம் தேதி தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை விரிவாக்கவும் இந்திய அரசியல் சட்டம் சுதந்திரம் அளிக்கிறது. இந்தியா – அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து நாடுகளுக்கும் மத சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அது ஒவ்வொருவரின் கடமையும்கூட!” என்றார். இந்நிலையில், நேற்று அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியுள்ளார் ஒபாமா. ஆனால், குறிப்பிட்ட எந்த மதத்தைக் குறித்தும் அவர் கூறவில்லை; வன்முறை என்பது குறிப்பிட்டக் குழுவுக்குமோ, ஒரு மதத்துக்குமோ உரியது அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், சிலுவையின் பெயரால் நடைபெற்ற கொடூரச் செயல்கள் குறித்தும் அவர் தன் பேச்சில் சுட்டிக் காட்டியுள்ளார். மத சகிப்புத் தன்மை இன்றி, வெறுப்பை வளர்க்கும் குழுக்கள் தங்களுக்கென்று டிவிட்டர் முதலிய சமூக வலைத்தளங்கள் மூலம் உலகெங்கும் தொடர்பு கொண்டு வெறுப்பினை இணையதளங்களில் விதைக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.