மலேசிய விமானம் எம்எச் 370 மாயமாகி ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மிகவும் குட்டித் தீவான குடா ஹுவதூ தீவுவாசிகள், அன்றைய தினம் மிகவும் தாழ்வாகப் பறந்த மிகப் பெரிய விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி காணாமல் போன மலேசிய விமானம் எம்.எச்.370 குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் தீவான குடா ஹுவதூ தீவுவாசிகள், அன்றைய தினம், மிகவும் தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்ததாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் கூறியுள்ளனர். இந்தத் தீவு மிகச் சிறிய தீவு. அந்த விமானத்தைப் பார்த்தது பற்றி அன்றைய தினம் தீவுவாசிகள் பேசிக் கொண்டனர். ஆனால், விமானம் மாயமான தகவல்கள் எதுவும் அவர்களுகு அப்போது தெரியவில்லை. பிறகுதான் விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததாம். அங்குள்ள உள்ளூர் இணைய்தளமான ஹவீருவுக்கு ஒருவர் அளித்த தகவலில், தாங்கள் கடல் விமானங்களைப் பார்த்திருப்பதாகவும், ஆனால், அவ்வளவு பெரிய விமானத்தை அதுவரை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த விமானத்தின் கதவுகளைக் கூட துல்லியமாகத் தாங்கள் பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர். ஒரு வேளை தாங்கள் பார்த்த அந்த விமானம்தான் மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். விமானம் பறந்து சென்ற சில நிமிடங்களில் பலத்த சத்தம் கேட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், அந்தத் தீவுக்கு செய்தித் தாள் ஊடகம் ஒன்று தங்கள் செய்தியாளர்களை அனுப்பி விரிவான தகவல்களைச் சேகரிக்கச் சொல்லியுள்ளதாம்.