லண்டன்: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வெளி நாடு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றார் வைர வியாபாரி நீரவ் மோடி. இவரது உறவினர் மெகுல் சோக்ஸியும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டார்.
நிரவ் மோடி குழுமத்துக்கு கடன்கள் அதிகம் கொடுத்தும், கடன் எதுவும் வசூல் ஆகாத நிலையில், நிரவ் மோடி மீது குற்றச்சாட்டை முன்வைத்தது பிஎன்பி வங்கி. இதை அடுத்து, யாருக்கும் தெரியாமல், லண்டனுக்கு கடந்த ஆண்டு குடும்பத்துடன் தப்பி ஓடினார் நீரவ் மோடி!
இதை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவான நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது மத்திய அமலாக்கத் துறை!
இந்நிலையில் நீரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி வருவதாக, டெலகிராப் ஊடக செய்தியாளர் பேட்டி எடுத்து வெளியிட்டார். அவர் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில் அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப் பட்டது. இதை அடுத்து, லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் நேற்று நீரவ் மோடியை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பித்தது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் நிரவ் மோடி இன்று காலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என கூறப் படுகிறது.
முன்னதாக கிங் பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவும் இது போல் நாட்டை விட்டு ஓடினார். அவரை கைது செய்ய நெருக்கடி கொடுத்தது இந்திய அரசு. இதை அடுத்து அவர் கடந்த 2017ல் கைது செய்யப் பட்டார். ஆயினும், அவர் குறித்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் அவர் உடனடியாக இந்தியா கொண்டுவரப் பட முடியவில்லை.