சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.50 கோடி ரொக்கப்பணம், மூன்றே முக்கால் கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலாமாக விளங்கி வருகிறது.
இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, பெரம்பலூர், அரியலூர், கரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
கோயிலுக்கு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு மாதத்துக்கான காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் கோவிலில் உள்ள 23 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டனர்.
இதில் கடந்த 19 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 916 கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் 3 கிலோ 786 கிராம் தங்கம் மற்றும் 5 கிலோ 315 கிராம் வெள்ளியும், 97 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கபெற்றதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply