மும்பை : 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடியும் முன்பே திடீரென ராஜினாமா செய்ததாலும், இந்திய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு நிலவரம் வெளியாகிவரும் நிலையில், காலையில் இருந்தே பங்குச் சந்தை வர்த்தகம் தள்ளாட்டத்தில் இருந்தது. குறிப்பாக பாஜக., பின்னடைவைச் சந்தித்ததால், அது பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், உர்ஜித் படேல் ராஜினாமா விவகாரமும் பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போது இந்திய பங்குச்சந்தைகளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 517.97 புள்ளிகள் சரிந்து 34,441.75ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 205.25 புள்ளிகள் சரிந்து 10,488.45ஆகவும் இருந்தது.
பின்னர் மதியம் 12 மணி அளவில் சென்செக்ஸ் 34,900 என்ற அளவில் இருந்தது.