ஒட்டுமொத்த தமிழ்நாடும் தனக்கு எதிராக இருப்பதாகவும், தன் முகத்தில் ஆசிட் அடிப்போம் என சிலர் மிரட்டுவதாகவும் நடிகை மீரா மிதுன் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே நடிகை மீரா மிதுனை சுற்றி சர்ச்சைகள் தான் தொடர்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சேரனுக்கு எதிராக அவர் தெரிவித்த புகார், அவருக்கே வினையாய் முடிந்தது.
இதனால் படவாய்ப்புகள் பறிபோயின. தொடர்ந்து கெட்டப் பெயரை சம்பாதித்த மீரா, ஒருகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு டாட்டா பைபை சொல்லிவிட்டு மும்பை பறந்துவிட்டார். ஆனால் அங்கு சென்ற பிறகு சும்மா இருக்காமல், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒரு பதிவை போட்டு வம்பிழுத்து வருகிறார்.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள மீரா, அதில், தமிழ்நாட்டை பற்றியும், தமிழக காவல்துறையை பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் காவல்துறை செயலிழந்து கிடப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ” பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் நான் எளிய இரையாக மாறிவிட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னர் நான் சில படங்களில் ஒப்பந்தமாகியிருந்தேன். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். ஒரு பாடல் காட்சியிலும் நடித்தேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் அவர்களை பார்த்தேன். நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு, எனக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைத்திருந்தனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க போகிறேன் என நான் எச்சரித்தேன். உன் மீதும் சில பிரிச்சினைகள் இருக்கிறது. எனவே நாங்களும் வழக்கு போடுவோம் என்றனர். பிறகு நான் அமைதியாகிவிட்டேன்.
அக்னி சிறகுகள் படத்திலும் இதேபோல் தான் நடந்தது. எனக்கு பதிலாக வேறு ஒருவரை அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர். அந்த படத்தில் நான் நடிக்கிறேன் என இயக்குனர் நவீன் பேட்டியில் கூறியது அனைவரும் அறிந்ததே. என்னை போன்ற ஒரு பிரபலமான ஹீரோயினை படத்தில் நடிக்க வைக்க கோலிவுட் இயக்குனர்கள் ஏன் தயங்குகிறார்கள் என தெரியவில்லை.
தமிழர்களுக்கு சக தமிழ் பெண் படத்தில் நடிப்பது ஏன் பிடிக்காமல் போகிறது என்பது எனக்கு புரியவில்லை. முன்பெல்லாம் நான் சம்மந்தப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதற்கு கூட யோசிப்பார்கள். ஆனால் இப்போது எனக்கு தெரியாமலேயே என்னை படத்தில் இருந்து நீக்குகிறார்கள். கைக்கழுவிவிட்டார்கள்
எல்லோரும் என்னை கைக்கழுவிவிட்டார்கள் என தெரிகிறது. இனி தமிழ்நாட்டில் எனக்கு மரியாதை இல்லை. ஊடகங்களுக்கு கூட சர்ச்சையான விஷயங்கள் தான் தேவைப்படுகிறது. என்னிடம் ஒருவார்த்தைக்கூட விளக்கம் கேட்காமல், என்னை மோசடிக்காரர் என ஒரு தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் இது அநியாயமான செயல்.
பிக் பாஸ் வீட்டிலும் எனக்கு இதேபோன்ற பிரச்சினை இருந்தது. சாண்டியிடம் மட்டும் தான் நான் பேசுவேன். சாண்டி எனக்கு நல்ல நண்பர். அவரை தவிர வேறு யாருடனும் நான் தொடர்பில் இல்லை.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு செயலற்று கிடக்கிறது. காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். கடந்த வாரம் கைதாகி சிறை சென்ற ஒருவர், அடுத்த வாரமே வெளியே வந்து என்னை பற்றி அசிங்கமாக பேட்டி கொடுக்கிறார். ஒரு பெண்ணை மனதளவில் நோகடிக்கும் நபர்களுக்கு பின்னால் தான் அனைவரும் இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் மட்டும் தான் இந்த நிலை இருக்கிறது என்றால் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் காவல்துறையே செயல்படாமல் தான் இருக்கிறது. என் மீது இஷ்டத்துக்கு வழக்கு தொடர்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருப்பதாக நான் உணர்கிறேன். ஒரு கும்பலே எனக்கு எதிரான காரியங்களை செய்கிறது”, என மீரா மிதுன் கூறியுள்ளார்.