நடிப்புக்கு தேசிய விருதுகளை பெற்றிருந்தாலும் அந்த ஹீரோவுடன் நடிக்கவில்லை என்ற குறை இருக்கிறது என்று பழம்பெரும் நடிகை சாரதா தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சாரதா. நாடகங்களில் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
தமிழில் வெளியாகி ஹிட்டான ரத்தக் கண்ணீர் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து புகழ்பெற்றவர் இவர்.
தமிழில், குங்குமம், துளசி மாடம், அருணகிரிநாதர், வாழ்க்கை வாழ்வதற்கே உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன், சிவாஜியின் என்னை போல் ஒருவன், சரித்திர நாயகன், ரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,
மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னட சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் துலாபாரம், சுயம்வரம் ஆகிய மலையாள படங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும் நிமஜனம் என்ற தெலுங்கு படத்தின் சிறந்த நடிப்புக்காகவும் மூன்று முறை தேசிய விருதை பெற்றவர்.
இடையில் அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவர், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.
கடந்த சில வருடங்களாக, இவர் சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இதில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
அப்போது அவர் பேசும்போது, ‘அந்த கால சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துள்ளேன்.
இந்த கால சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துவிட்டேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு குறை இருக்கிறது. அது எப்போது தீரும் என்று தெரியவில்லை. மலையாளத்தில் மம்மூட்டியுடன் ராப்பகல் என்ற படத்தில் நடித்துவிட்டேன்.
ஆனால், மோகன்லாலுடன் ஒரு படத்தில் கூட நான் நடிக்கவில்லை. அந்த குறை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.