சர்கார் திரைப்படம் வெளியாகும் தீபாவளி நாள் அன்றே இணையத்தில் வெளியிடப் போவதாக அறிவித்த தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவால் விடுத்தபடி சொன்னது போலவே இணையதளத்தில் வெளியிட்டது.
தமிழ், தெலுகு திரைப்படங்களை வெளியாகும் நாளன்றே இணையதளத்தில் வெளியிட்டு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், இந்த முறையும் சவால் விடுத்திருந்தது. இதனால் அதன் அட்மினை பிடிப்போம் என்று சவால் விட்ட விஷாலால், தற்போது வரை தமிழ் ராக்கர்ஸ் அட்மின் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் டிவி., ஒன்றில், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை டிவி.,யில் ஒளிபரப்பப்படும் நேரம் குறித்து டிவிட்டரில் அறிவித்தது. அந்தப் பதிவின் கீழ் திரைக்கு வரும் சர்கார் திரைப்படத்தை அன்று மாலை 6:30க்கே இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பதிவிட்டது.
இதை அடுத்து, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது. திரையரங்குகளில் சிசிடிவி கேமரா பொருத்தி, சர்கார் படத்தை படம் பிடிக்கும் நபர்களை உடனடியாக பிடித்து போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று முயற்சிகளை எடுத்தது. ஆனால், சொன்னது போலவே திரையரங்கில் கேமரா வைத்து எடுத்து, சர்கார் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு பெரும் பின்னடைவுதான்.
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களைக் குறைத்து, சாமானிய ரசிகனின் பாக்கெட் பணத்தைக் கொள்ளையடிப்பதை நிறுத்தாத வரையில், தமிழ் ராக்கர்ஸ் போன்ற ஏழைப் பங்காளர்களின் முயற்சிகள் வெற்றி அடைந்தே வரும் என்கிறார்கள் சமூக தளங்களில்!