நெல்லை மாவட்டத்துக்கு புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு…
பழைய குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் வரத்து இருக்கிறது.
இந்த அருவியின் கீழ் அமைந்துள்ள மாரநேரி கால்வாய் மூலம் மாரநேரி குளமும், செங்குளம் கால்வாய் மூலம் வெள்ளபாறை, உப்பளாங்கண்ணார், செம்மனாபேரி, அருதன்குளம், செங்குளம், பெட்டைகுளம், நல்லமாடன் புதுக்குளம் ஆகிய குளங்களும், அதன்கீழ் உள்ள வைராவி கால் மூலம் ஆவரந்தா, திருப்பணி, பட்டிபத்து, புதுக்குளம், சென்னெல்தா, நாறாயணபேரி, கைக்கொண்டார், வெள்ளாளன் புதுக் குளம், பத்மநாதபேரி ஆகிய குளங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இவற்றில் மாரநேரி, செங்குளம் கால்வாய் பாசன பகுதிகளில் தற்போது விவசாயம் ஏதும் நடைபெற வில்லை. அதனால் அங்கு அதிகம் தண்ணீர் தேவைப்பட வில்லை. ஆனால் வைராவிகால் மூலம் பாசனம் பெறும் குளங்கள் பெருகி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் இங்கு வாழும் மக்களும் ஆடு, மாடு, கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளும் குடிக்க தண்ணீர் இன்றி சிரமப் படுகின்றனர்.
எனவே மாவட்ட ஆட்சித் தலைவர், தண்ணீர் தேவைபடும் வைராவிகால் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகிறோம்… – என்று ஊர் மக்கள் சார்பில், ராமநதி – ஜம்புநதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக் குழு அமைப்பாளர் இராம உதயசூரியன், மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார்.