கஜானாவில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து வீதியில் எறியும் ராகுலின் தேர்தல் அறிக்கை நிச்சயம் இது சரியான வழிகாட்டல் அல்ல! இதெல்லாம் தமிழக திமுக அதிமுக செய்யும் ஒருவித ஏமாற்று அரசியல்!
அதை தேசிய கட்சியும் அறிவிப்பது சரியல்ல, மாநில கட்சிக்கு என்ன பொறுப்பு? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது அவர்கள் போக்கில் விளையாடுவார்கள்! அதற்கு அந்த ஜவஹர்லால் நேருவுக்கு அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்!
தமிழக கடன் 4 லட்சம் கோடி என்பதை தவிர தமிழக சாதனை ஒன்றுமில்லை! ஆனால் தேசிய கட்சி அப்படியா?
நாட்டின் பொருளாதாரம் , பாதுகாப்பு, அந்நிய செலாவணி என ஏக பொறுப்புகள் உண்டு! தன் ஆட்சி பொருளாதார திட்டம் பற்றியோ நாட்டின் பாதுகாப்புக்கு எடுக்கபடும் முயற்சிகள் பற்றியோ துளியும் ராகுல் பேசவில்லை!
தேசதுரோக சட்டத்தை நீக்குவாராம், எதற்கு? வைகோவும் சைமனும் தியாகுவும் கொளத்தூர் மணியும் அதிகம் பேசவா?
ராகுலின் அறிக்கையில் தேசத்தை பற்றி கொஞ்சமும் அக்கறைபட்டதாக தெரியவில்லை இது ஆபத்தான போக்கு! பணத்தை அப்படி எறிவேன், இப்படி எறிவேன் என்கின்றாரே அன்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளப்பத்திற்கும் பாதுகாப்பிற்கும் தொலைநோக்கிற்கும் என்ன சொல்கின்றார் என்றால் ஒன்றுமே இல்லை
குறைந்தபட்சம் எங்கள் ஆட்சியில் ஏவுகணை தடுப்பு சாதனம் உருவாக்கப்படும், நவீன போர் விமானம் கட்டப்படும் என்ற வார்த்தை மருந்துக்கும் இல்லை! வெளியுறவு கொள்கை பற்றி ஒரு வார்த்தை இல்லை, அந்நிய முதலீடுகளை கவர்வது குறித்து சத்தமே இல்லை!
பொறுப்பற்ற அந்த தேர்தல் அறிக்கை புறக்கணிக்கப்பட வேண்டும்!
– ஸ்டான்லி ராஜன்