சாமை எள் புளியோதரை
தேவையானவை:
சாமை அரிசி – ஒரு கப்
எள் – 2 டீஸ்பூன்
புளிக்கரைசல் – கால் கப்
(பெரிய நெல்லிக்காய் அளவு
புளியை எடுத்துக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்)
மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஆறு (அல்லது காரத்துக்கேற்ப)
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சாமை அரிசியைக் கழுவி, தண்ணீர்விட்டு வேகவைத்து உதிரியாக சாதம் வடித்துக்கொள்ளவும். மல்லி, காய்ந்த மிளகாய், எள் ஆகிய மூன்றையும் ஒன்றாக வெறும் வாணலியில் வறுத்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, புளிக்கரைசலைச் சேர்க்கவும். இதனுடன் உப்பு, கொரகொரப்பாகப் பொடித்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்றாகக் கொதித்து சுண்டி வந்தவுடன் இறக்கிவிடவும். சாமை சாதத்தை ஆறவைத்து, இந்தப் புளிக்காய்ச்சலைத் தேவையான அளவு கலந்தால், சாமை புளியோதரை தயார்.
குறிப்பு:
சாமை அரிசி சீக்கிரம் வெந்துவிடும் இயல்புகொண்டது. எனவே, இந்த அரிசியை வேகவைக்கும்போது இரண்டு கொதியிலேயே சாதம் பொலபொலவென வெந்துவிடும். அதனால், அதிகம் குழையவிடாமல் வேகவைக்க வேண்டும்.