இலை வடாம்
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 200 கிராம்,
பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன்,
ஓமம் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
சதுரமாக நறுக்கிய வாழையிலைத் துண்டுகள் – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வடாம் செய்வதற்கு முதல் நாளே இட்லி அரிசியையும் பச்சரிசியையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து மாவை வெளியில் வைத்துவிடவும். ஓமம், ஒரு டீஸ்பூன் எண்ணெய், பெருங்காயத்தூளை மாவில் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு வாழையிலையின் பின்புறம் மாவை ஒரு கரண்டியால் ஊற்றிப் பரவலாகத் தேய்த்துக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் அதன்மேல் ஸ்டீமர் தட்டை (ரைஸ் குக்கரில் இருக்கும் ஸ்டீமர் தட்டு) வைத்து அதன் மேல் மாவு எழுதிய இலையை வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும். அடுத்த இலையைத் தயாரிப்பதற்குள் முதலில் வைத்த இலை மாவு வெந்துவிடும். சிறிது ஆறியதும் எளிதாக இலையிலிருந்து உரித்து எடுத்துவிடலாம். இதே முறையில் இலையை மாற்றி மாற்றி எழுதி வேகவைத்து எடுக்கலாம். ஒரு பாதி மாவை இதுபோல காரமில்லாத இலை வடாமாகத் தயாரித்துவிட்டு, மீதமிருக்கும் மாவில் மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து இதே முறையில் இலை வடாம் தயாரிக்கலாம்.
குறிப்பு: இந்த இலை வடாமுடன் இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துச் சாப்பிடலாம். வெயிலில் காயவைத்து எண்ணெயில் பொரித்தோ அல்லது தீயில் வாட்டியோ சாப்பிடலாம். பத்தியச் சாப்பாட்டில் இந்த இலை வடாம் கட்டாயம் இடம்பெறும்.