உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் குல்தாபாத் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் சிறுமி ஒருவர், தனது தந்தையாலே கொலை செய்யப்பட்டுள்ளார்.
பலூன் கேட்டு நான்கு வயது சிறுமி தொடர்ந்து அடம்பிடிக்கவே, கோபத்தில் கொலை செய்துவிட்டார் என்று சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். மேலும், கொலை செய்தவர் சிறுமியின் வளர்ப்பு தந்தை ஆவார்.
காவல்துறையில் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) பிரிஜேஷ் ஸ்ரீவாஸ்தவா இந்த சம்பவம் குறித்து கூறும்போது, ‘தகவல் தெரிந்து நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது சிறுமி இறந்துவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் வளர்ப்பு தந்தை காயமடைந்த நிலையில் காணப்பட்டார். சிறுமியின் தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் கணவன், மனைவிக்கு இடையேயும் சண்டை ஏற்பட்டிருக்கலாம்’ என்றும் கூறினார்.
சிறுமியின் தாயார் கூறும்போது, ‘நானும், என் கணவரும் மருந்துகளை வாங்க வெளியே வந்த போது, என் மகள் பலூன் கேட்டு அடம்பிடித்தாள். இதனால், என் கணவர், மகளை அடிக்கத் தொடங்கினார்.
நான் அவரைத் தடுக்க முயன்றபோது, அவர் என்னை பைக்கில் இருந்து தள்ளிவிட்டு, மகளை அவருடன் அழைத்துச் சென்றார். பின் உள்ளே சென்று வீட்டை பூட்டிவிட்டார். உடனே பயந்து தான் நான் போலீஸை அழைத்தேன். அதன்பின்னரே மகளை அவர் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது’ என்று கூறினார்.
பலூன் கேட்டதற்காக தந்தை, மகளை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.