கிருஷ்ணகிரி மாவட்டம், மதகொண்டப்பள்ளியில் உள்ள கவுரம்மா ஏரியில், 30 முதல், 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் மிதப்பதாக, தளி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் சடலத்தை மீட்டு, இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். தலைப்பகுதி, வீக்கமான நிலையில் இருந்ததால், போலீசாரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
கவுரம்மா ஏரிக்கரையில் அமர்ந்து, குடிமகன்கள் மது அருந்துவது வழக்கம். இதுபோல், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், இளைஞரை கொலை செய்து, ஏரியில் தூக்கி வீசியிருக்க வாய்ப்புள்ளது.
இறந்த நபர் குறித்த விபரம் தெரிந்தால் தான், கொலையா அல்லது தற்கொலையா என்ற விசாரணையை துவங்க முடியும் என்பதால், மாவட்டத்தில் மாயமானவர்கள் விபரங்களை சேகரிக்கும் முயற்சியில், தளி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.