தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று காலை தொடங்கின. மார்ச் 1 ஆம் தேதி இன்று துவங்கும் பிளஸ் டூ தேர்வுகள், மார்ச் 19-ஆம் தேதி நிறைவடையும்! ஏப்ரல் 19-ல் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி, மதியம் 12.45க்கு முடிவடைகின்றன. இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது.
இந்த ஆண்டு, முதன் முறையாக 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
இதுவரை ஒவ்வொரு பாடத்துக்கும் 200 மதிப்பெண்கள் வழங்கப் பட்டு, ஆறு பாடங்களுக்கு 1200 மதிப்பெண்கள் என தேர்வுகள் நடைபெற்று வந்தன. ஆனால் இந்த ஆண்டு பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.
மொழிப் பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை இருந்தது நீக்கப்பட்டு, இந்த ஆண்டு ஒரே தாள் என மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,941 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
வழக்கம்போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. தேர்வு மையங்களில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.
தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 49,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு வளாகத்திற்குள் ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தடுக்க 4000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.