ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் என்று தன் கொள்கையை மிக விரிவான தளத்தில், அர்த்தத்தில் அறிவித்தார். நேர்மறை அரசியலை முன்னெடுக்க விரும்புவதாகச் சொன்னார். தனித்தனி விஷயங்கள் சார்ந்து பார்த்தால் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் சிலவற்றை ஆதரித்தார். சிலவற்றை எதிர்த்தார்.
கருணாநிதியும் நல்லவர்; எம்ஜிஆர்-ஜெயலலிதாவும் நல்லவர்கள் என்று யாருடனும் பகைமை பாராட்டாத அரசியலை முன்னெடுக்க விரும்புவதாகக் காட்டினார். இந்து மத பக்தியை வெளிப்படையாக வழக்கம் போல் காட்டினார். திராவிட அரசியலுக்கு உகந்தவகையில் இந்து-இந்துத்துவ சக்திகளைத் திரைப்படங்களில் எதிர்க்கவும் செய்தார்.
ஒருவகையில் மையம் என்ற கொள்கையை கமலைவிட ரஜினியே அதிகமும் பின்பற்றினார். கமல் கட்சியின் பெயரில் மட்டுமே மையம் என்று வைத்துக்கொண்டு இந்து இந்திய விரோதம் தொடங்கி பாஜக எதிர்ப்பு வரை அனைத்திலும் முழுக்க முழுக்க காங்கிரஸின் பி.டீமாகவே செயல்பட்டு வருகிறார் (அவர் உண்மையில் கழுவாத பீச்சாங்கை என்றுதான் தன் கட்சிக்குப் பெயர் சூட்டியிருக்கவேண்டும்).
ரஜினியின் இந்த மைய நிலைப்பாடானது காங்கிரஸை திமுகவிடம் இருந்து பிரிக்கும்; விசிகவை ரஜினியின் அணியில் இடம்பெறவைக்கும். திமுகவைத் தனித்து விடும். கமல், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங் என சேரக்கூடும். அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம், விஜயகாந்த் என ஒரு பக்கம் நிற்பார்கள். ரஜினி பெரிதும் தனியாகவே நிற்பார். எளிதில் வெல்வார் என்ற ஒரு அரசியல் கணக்குக்கு இடமளிப்பதாகவே ரஜினியின் இதுவரையிலான அரசியல் இருந்துவந்தது.
ஆனால், இப்போது ரஜினிகாந்த் முதல் முறையாக, தமிழகத்தின் ஈவெராயிஸ ரெளடி அரசியலை எதிர்த்து, துணிச்சலாக ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.
இது திமுக, காங் கூட்டணியை பலப்படுத்தவே செய்யும். திருமாவளவன் நிச்சயம் ரஜினி பக்கம் வரமாட்டார். அதோடு திமுக கூட்டணி பக்கம் மேலும் பலர் அணி திரள வழிவகுக்கும். இது நிச்சயம் ரஜினி இதுவரை செய்துவந்த மிதமான, மையமான அரசியலுக்கு எதிரானது.
ரஜினியை இந்து-இந்துத்துவத்துக்கு எதிராக அரசியல் செய்யவைக்கவேண்டும். அல்லது அவர் பாஜகவின் ஊதுகுழலாகிவிடவேண்டும் என்பதுதான் எதிர் தரப்பின் வியூகம். அவர் இந்த விஷயத்தில் நடுநிலையாக இருப்பதென்பது நிச்சயம் இந்து விரோதசக்திகளுக்குப் பெரும் அபாயமாகவே இருக்கும்.
முதலில் இருந்தே அவரை ஏதேனும் ஒரு பக்கத்தில் நில் என்று மிரட்டியதன் காரணமே அதுதான். எப்படியும் நம் பக்கம் வர வாய்ப்பு இல்லை. அப்படியானால் எதிர் பக்கம் சென்று ஐக்கியமாகிவிடு என்றுதான் மறைமுகமாக விரட்டிவந்தார்கள். ஆனால், அவரோ நிஜத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் திரைப்படங்களில் இந்துத்துவத்தை எதிர்த்தும், பட்டியல் இன நாயகனாகவும் நடித்துவந்ததை எதிர் தரப்பால் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ முடியவில்லை.
இந்துத்துவர்களுக்குமே கூட ரஜினியின் மைய நிலைப்பாடு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இத்தனை காலம் தெய்வ நம்பிக்கை கொண்டவராக திரைப்படங்களிலும் இடம்பெற்றவர் ரஞ்சித் பிடியில் சிக்கி தனது கொள்கைகளுக்கு எதிரான விஷயங்களைச் செய்ததென்பதை தீவிர ரஜினி ரசிகர்களால் கூடப் பொறுக்க முடியவில்லை.
நிச்சயமாக அவர் கோட்சேவையும் சாவர்க்கரையும் புரிந்துகொண்டு, புகழ்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்துக் கடவுள்களை அவதூறு செய்யும் காட்சிகளில் நடித்திருக்கவேண்டாம் என்பதுதான் இந்துத்துவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இருக்கிறது.
இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு இரும்புக் கரம்… எளிய இஸ்லாமிய மக்களுக்கு நட்புக் கரம் என்ற இந்துத் துவத்தைத்தான் ரஜினியிடமும் எதிர்பார்க்கிறார்கள். அவரோ அபாயகரமான அப்பீஸ்மெண்ட் அரசியலை நோக்கியே நகர்ந்தார். பாமக-விசிக துருவ அரசியலில் விசிக பக்கம் அவர் சாய்ந்ததை அந்த அணியினரும் விரும்பவில்லை. உண்மையில் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும்பிய ரஜினி விசிக-பாமக நல்லுறவைத்தான் விரும்பியிருக்கவேண்டும்.
டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வதுபோல் பிற சாதிப் பெண்களை சகோதரியாக மதித்து ஜாதி நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் அரசியலைத்தான் ரஜினி பேசியிருக்கவேண்டும். அதைச் செய்யவில்லை.
எனவே இந்துத்துவர்கள், இந்து விரோதிகள் என இரு தரப்புமே ரஜினியின் பிழையான மைய அரசியலால் அதிருப்தியுடனே இருந்தார்கள். இப்படியான நிலையில் ரஜினி வெளிப்படையாக ஈவெராயிஸ ரெளடித்தனத்தைத் துணிந்து விமர்சித்ததென்பது இரு தரப்புக்குமே ஒருவகையில் வெற்றியாகவே அமைந்திருக்கிறது.
இந்து விரோத திமுகவும் அதன் அல்லக்கை அணிகளும் ரஜினியை மோதியின் அடியாள் என்று சொல்லியே ஓரங்கட்டி விடலாம் என்று வியூகம் அமைப்பார்கள். அதேநேரம் இந்துத்துவர்கள் ரஜினியின் பக்கம் கொஞ்சம் தைரியமாக வந்து நிற்க வழி திறந்திருக்கிறது.
ஈவெராயிஸம் என்பது ஊதிப் பெருக்கப்பட்ட பலூன் தான். திமுக-ஈ.வெ.ரா குழாயடிச் சண்டையை மைய நீரோட்டப் பேசு பொருளாக மாற்றினாலே போதும், ஈவெராவும் திமுகவும் அவர்களுக்கான வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு கைகோர்த்தபடிச் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்.
இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகளை ஈ.வெ.ராவின் நாத்திக கருத்துகளைக் கொண்டு லேசாகத் தட்டினாலே போதும் அவர்களும் அன்னாரை உரிய இடத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.
பட்டியல் இன அரசியல் சக்திகளுமே கூட பண்ணையார் கட்சித் தலைவரை நீண்ட காலம் சுமந்து திரிய முடியாது. அப்பறம் இருக்கவே இருக்கிறார்கள், நாம் தமிழர் தம்பிகள். எனவே, ரஜினி செய்திருப்பது மிகவும் சரியான செயல்தான். என்ன… அவர் அந்தத் துருப்புச் சீட்டை முழுமையாக, தொடர்ந்து பயன்படுத்தவேண்டும்.
எதிரிகள் மோதி எதிர்ப்பு என்பதனூடாக இந்து-இந்திய விரோதத்தை முன்னெடுக்கிறார்கள். ஈ.வெ.ரா எதிர்ப்பினூடாக தேசியம், தெய்விகம் என்பதை ரஜினி முன்னெடுக்கவேண்டும். அவருக்கான அரசியல் பொறுப்பு என்பது அதுதான். அதை நோக்கி முதல் காலடியை எடுத்து வைத்திருக்கிறார்.
Enemies say that his days are numbered.
He should make his enemies realize that his steps are cleverly, perfectly measured.
- பி.ஆர்.மகாதேவன் (எழுத்தாளர்)