இங்கிலாந்தில் இருக்கும் ஈக்வடார் நாட்டு தூதர் ஜெய்மி மார்சன் ரோமெரோ, நித்தியானந்தா, கடந்த ஆண்டே வெளிநாட்டிற்கு தப்பியோடியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி சுற்றுலா பயணியாக ஈக்வடார் நாட்டில் நித்தியானந்தா நுழைந்ததாக அவர் கூறியுள்ளார்.
அதன் பின்னர், சர்வதேச பாதுகாப்பு தகுதி கோரி விண்ணப்பித்த நித்தியனந்தாவின் மனுவை ஆய்வு செய்த ஈக்வடார் அரசு, அக்டோபர் 19ம் தேதி அவருக்கு தற்காலிக விசா வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் நித்தியானந்தா கோரிக்கையின் உள்நோக்கத்தை அறிந்த அதிகாரிகள், அகதியாக ஏற்றுக்கொள்ளும் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக ஜெய்மி மார்சன் கூறியுள்ளார்.
கோரிக்கை நிராகரிப்பால் ஆத்திரமடைந்த நித்தியானந்தா, அந்நாட்டு அதிகாரிகள் மீது அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், இதன் விளைவாகவே கடந்த ஆகஸ்டு மாதம் ஈக்வடார் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஈக்வடாரிலிருந்து வெளியேறும்போது ஹைதி செல்லவிருப்பதாக நித்தியானந்தா கூறியதாகவும் ஜெய்மி மார்சன் தெரிவித்துள்ளார். மேலும், கைலாசா என்ற தீவு ஈக்வடார் நாட்டில் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.
ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை. அவருக்கு நிலம் வாங்கவோ, தஞ்சம் புகவோ ஈக்வடார் அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்றும் ஜெய்மி மார்சன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பெண் சீடா் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் கடந்தாண்டு விசாரணையை தொடங்கியபோதே நித்தியானந்தா தலைமறைவாகியுள்ளது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.
குஜராத் ஆசிரமத்தில் சிறுமிகளை கடத்தி வைத்திருப்பதாக நித்தியானந்தா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த பிறகு தான் அவரது லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளன