திருப்பதி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற பஸ்சும், சொகுசு பஸ்சும் நேருக்குநேர் மோதியதில் டிரைவர், கிளீனர் உயிரிழந்தனர். ஐயப்ப பக்தர் உள்பட 50பேர் படுகாயம் அடைந்தனர்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தனி பஸ்சில் சென்றனர்.
சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்றிரவு மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு பஸ்சில் வந்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த காசிபண்டா அருகே பூதலப்பட்டு-நாயுடுபேட்டை நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த அரசு சொகுசு பஸ்சும், பக்தர்கள் சென்ற பஸ்சும் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கியது.
இதில் 2 பஸ்களின் முன்பகுதியும் நொறுங்கியது. 2 பஸ்களில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
சொகுசு பஸ் டிரைவரான பெனுமலூரை சேர்ந்த ரமேஷ், மற்றும் கிளீனர் கிருஷ்ணா மாவட்டம் உய்யூறு கிராமத்தை சேர்ந்த பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சந்திரகிரி காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்ததால் கேஸ் கட்டர் மூலம் இரும்பு ராடுகளை துண்டித்து காயமடைந்தவர்களை மீட்டனர்.
படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோரை திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ், பிரசாத் ஆகியோரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த பக்தர்கள் மற்றும் பயணிகளின் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. விபத்துக்குகான காரணம் குறித்து சந்திரகிரி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.