ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது என்றும், இன்னும் ஒருவாரத்தில் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் மூலம் 2004ஆம் ஆண்டிலும் அகழாய்வு நடைபெற்றது. ஆனால் இதன் ஆய்வு அறிக்கை இதுவரை வெளிவரவில்லை.
இதற்கிடையில் மாநில அரசு, ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணிக் கரையில் உள்ள பல இடங்களில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாமிரபரணி ஆற்றங்கரையையொட்டிய ஆதிச்சநல்லூரில், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகளுக்கான இடங்களை தேர்வு செய்தனர்.
500-க்கு 500 மீட்டரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தினை தேர்வு செய்து, அந்த இடத்தை தூய்மை செய்தனர். பின்னர் அந்த இடத்தில் பூமியில் ஊடுருவிச் செல்லும் பிரத்யேக கருவி மூலம், சுமார் 7 அடி ஆழத்துக்கு பார்வையிட்டனர். இன்னும் ஓரிரு தினங்களில் இந்த இடத்தில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது