குலாப் ஜாமுனை எண்ணெய்யில் பொரிக்கும்போது சிறிது கருகி விட்டாலும் ஜாமும் இருகி, சுவை மாறிவிடும். இதற்கு ஜாமுனை சர்க்கரை பாகுடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து சூடு செய்து இறக்கினால் போதும் ஜாமும் மிருதுவாக இருக்கும்.
அதிரசம் செய்யும்போது அதிரச மாவுடன் பேரிச்சம் பழத் துண்டுகள் சேர்த்து, பிசைந்து அதிரசம் செய்தால் புது சுவையுடன் இருக்கும் குழந்தைகள் விரும்பி உண்பர்.
சிலருக்கு சீடை செய்யும்போது வெடித்து விடும். அதற்காகவே சீடைச் செய்வதை கைவிட்டு இருப்பார்கள். இனி சீடை செய்யும் போது, மாவினை சீடையாக உருட்டிய பிறகு, ஊசியால் சிறு துளையிட்ட பின் எண்ணெய்யில் பொரித்தால் வெடிக்காது.
பலகாரத்தில் அதிக எண்ணெய்த் தன்மை இருந்தால் இரண்டு நாட்களுக்குமேல் பயன்படுத்த முடியாது. எனவே எண்ணெய் பலகாரங்கள் செய்ய ஆரம்பிக்கும் போதே, எண்ணெய்யில் சிறு துண்டு புளியைப் போட்டு பின், பலகாரங்களைப் பொரித்து எடுத்தால் பலகாரங்கள் எண்ணெய் உறியாமல் இருக்கும்.
இந்த தீபாவளிக்கு சிறு தானியங்கள் தான் டிரெண்ட். உங்கள் வீட்டில் எந்தச் சிறுதானிய பலகாரம் செய்தாலும் மாவுடன், சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், பலகரம் மிருதுவாக இருக்கும்.
அதிரசம் செய்வதன் சூட்சமமே பாகு எடுப்பதில்தான் உள்ளது. அதிரசத்திற்கு பாகு எடுக்க வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டு கரைக்கவும். வெல்லம் பாகு பதம் வந்ததும், பாகினை எடுத்து தண்ணீர் வைத்திருக்கும் பவுலில் சிறிது ஊற்றி பார்க்கவும். பாகு கையில் ஒட்டாமல் பந்து போன்று உருண்டு வருந்தால் பதம் சரியாக இருப்பதாக அர்த்தம்.
மைசூர் பாக்கினைச் சற்று புதுச் சுவையுடன் செய்ய, மாவு பிசையும்போது முந்திரியைப் பொடித்துச் சேர்த்தால் புதிய சுவையுடன் இருக்கும்.
தட்டையின் சுவையினைக் கூடுதலாக்க மாவு பிசையும்போது வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து செய்ய சுவை கூடுதலாக இருக்கும்.
நார்த் இந்தியன் ரெசிப்பி செய்ய விருப்பமா அப்போ ரசகுல்லா ச்செய்யலாம்.ரசகுல்லா செய்யும் போது, சர்க்கரைப் பாகுடன் சிறிது ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் திரிந்த பன்னீரை, தண்ணீர் இல்லாமல் உலர்த்த வேண்டும். அப்போதுதான் ரசகுல்லா உடையாமல் இருக்கும்.
தேங்காய் பால் முறுக்கு செய்ய மாவு பிசையும்போது சிறிது வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் கூடுதல் சுவையோடு முறுக்கு தயார்.