தென் மாவட்டங்களில் முதன்முதலாக தென்காசியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வளாக கலையரங்கு இதற்காக தேர்வு செய்யப்பட்டு இதில் 3 பிரிவுகளில் 200 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை மையம் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா, முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கலா ஆகியோர் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவின்படி சித்த மருத்துவ இயக்குனர் மற்றும் மாவட்ட இணை இயக்குனர் ஆகியோர் ஆலோசனையின் படியும் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழிகாட்டுதலின் பேரிலும் இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவி வருவதால் இந்த சிகிச்சை மையம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நோய் அறிகுறி ஏற்பட்டவர்கள் 55 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சித்த மருந்துகள் வழங்குவது மட்டுமல்லாமல் யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவையும் கற்றுத்தரப்படும். உணவும் நாங்களே இலவசமாக அளிக்கிறோம். உணவு இங்கேயே தயார் செய்யப்படுகிறது
உளுந்து சாதம், அரிசி சாதம், முருங்கை சாம்பார், மிளகு ரசம், அவரைக்காய் பொரியல், இஞ்சி துவையல், ஐங்காய பொடி கலந்த மோர், சீரகத் தண்ணீர், நெல்லிக்காய் சாதம், காய்கறி கூட்டாஞ்சோறு, எலுமிச்சை இஞ்சி ரசம், பீன்ஸ் பொரியல், மணத்தக்காளி கீரை, கூட்டு புதினா சாதம் எள்ளு சாதம் மிளகு குழம்பு, தூதுவளை துவையல், கறிவேப்பிலை சாதம், சுண்டைக்காய் குழம்பு, கண்டந்திப்பிலி ரசம், கோவைக்காய் பொரியல், கொண்டை கடலை பருப்பு, கொத்தமல்லி சாதம், வாழைப்பூ பொரியல், பட்டாணி, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து முடக்கத்தான் இலை வதக்கிய குழம்பு, அரைக்கீரை பொரியல், பீர்க்கங்காய் கூட்டு போன்ற உணவு வகைகள் ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி வழங்கப்படும்.
நோய்தொற்று கண்டறியப்பட்ட நாளிலிருந்து 10-வது நாள் இந்த சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் மறு பரிசோதனை நடைபெறும். அதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என கண்டறியப்பட்டால் 4 நாட்களுக்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
வீட்டிலும் அவர்கள் 14 நாட்கள் இதுபோன்ற உணவு வகைகளை சாப்பிட்டு சித்த மருந்துகளை சாப்பிட்டால் நோய் பூரணமாக குணமடையும் என்று அவர்கள் கூறினர்.