வயிற்றுப் போக்கு குணமாக…
காரட் கிழங்கை தினசரி உணவுடன் எந்த வகையிலாவது உபயோகித்து வர நீண்டகால வயிற்றுப் போக்கு குணமாகும்.
திராட்சை விதைகளைக் காய வைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஐந்து கிரெய்ன் வீதம் வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நீண்ட கால வயிற்றுப் போக்கு குணமாகும்.
லவங்கப்பட்டை, கிராம்பு. கடுக்காய்ப்பூ வகைக்கு கால் ரூபாயெடை எடுத்து கொஞ்சம் வெண்ணெயில் இட்டு வறுத்து, இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு பாதியளவாக சுண்டக் காய்ச்சி, வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் கொஞ்சம் வெண்ணெய் கலந்து காலை வெறும் வயிற் றிலும் மாலையிலும் சாப்பிட அஜீரண வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
அஜீரணமா?
அரை ஸ்பூன் ஓமத்தையும் கால் ஸ்பூன் உப்பையும் பட்டுப் போல் தூள் செய்து வாயில் போட்டு வெந்நீர் குடித்தால் அஜீரணம் உடனே நீங்கி பசி உண்டாகும்.
மலச்சிக்கல் சரியாக…
வல்லாரையிலை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து ஒரு சட்டியில் பாலை வைத்து அதன் மேல் வேடு கட்டி கீரையை அவித்து எடுத்து நன்கு உலர வைத்து இடித்து தூள் செய்து சலித்து அதில் 5இல் ஒரு பங்களவு அதிமதுரத்தைத் தூள் செய்து கலந்து சீசாவில் எடுத்து வைத்துக் கொண்டு இரவு ஒரு ஸ்பூன் அளவு வாயில் போட்டு வெந்நீர் குடிக்க காலையில் மலம் நன்கு வெளியேறும்.
வாத நோய் சரியாக…
பெரு நெருஞ்சி இலைகளை நிழலில் உலர்த்தித் தூள் செய்து இரண்டு ஸ்பூன் பசும்பாலில் கலக்கிச் சாப்பிட்டு வர வாத நோய்கள் குணமாகும்.
வழுக்கை சரியாக…
முற்றிய மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டதும் எண்ணெய் சிவப்பாகும். அந்த இலைகளை அரித்து எடுத்து விட்டு மீண்டும் இவ்வாறு இலைகளைப் போட்டு ஐந்தாறு முறை காய்ச்சி தினசரி தேய்த்து வந்தால் தலைமயிர் உதிர்வது நிற்கும். வழுக்கை விழுந்த இடங்களிலும் முடி வளரத் தொடங்கும்.