வரும் ஆக.29ஆம் தேதி அன்று ஃபிட்னஸ் இந்தியா இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் மக்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் எனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார்.
இன்று ஒலிபரப்பான அவரது மனதின் குரல் நிகழ்ச்சியில், தற்போது மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழாவை, அரசின் சார்பில் மிகப்பெரிய விழாவாகக் கொண்டாட நாடு தயாராகி வருகிறது என்று குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் சேவை- பிரிக்க முடியாத பகுதி! அவரது பிறந்தநாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்தை மிகப்பெரிய அளவில் மக்கள் முன்னெடுக்க வேண்டும்! நாட்டுக்கு சேவையாற்றுவதன் மூலம் மகாத்மா காந்திக்கு சிறப்பான அஞ்சலியை செலுத்த முடியும் என்றார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் பட்ட நிலையில், கிருஷ்ண ஜயந்தி உத்ஸவ நிகழ்ச்சிகளைப் பற்றி தனது உரையில் குறிப்பிட்ட மோடி, தற்கால பிரச்னைகளுக்கு கிருஷ்ணரின் வாழ்வின் மூலம் தீர்வு காணலாம் என்றார்.
தேசிய விளையாட்டு தினமான வரும் ஆக. 29ஆம் தேதி ஃபிட்னஸ் இந்தியா இயக்கம் தொடங்கப்பட உள்ளது. அனைவரும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், அதில் அக்கறை செலுத்தவும் ஆர்வம் காட்ட வேண்டும்… என்றார்.
மேலும், தாம் அண்மையில் கலந்து கொண்ட டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில், பியர் ஃகிரில்ஸ் உடன் இந்தியில் உரையாடியதை அவர் எப்படி புரிந்து கொண்டார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர் என்று அதனைச் சுட்டிக் காட்டிய மோடி, இந்தியில் கூறப் படும் சொற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லும் தொழில்நுட்பக் கருவி பியர் ஃகிரில்சின் காதில் பொருத்தப்பட்டிருந்தது, அதை வைத்து அந்த உரையாடல் சிறப்பாக நடந்தது என்று அந்த ரகசியத்தைப் போட்டுடைத்தார் பிரதமர் மோடி.