பாட்னா: உத்தரவாதம் தருவதற்கு யாரும் இல்லாமல், வங்கிகள் எதுவும் கடன் கொடுக்காததால் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே பிச்சைக்கார வங்கி ஒன்றை பீகாரில் தொடங்கி நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொகையான 800 ரூபாயை மூலதனமாக வைத்து இந்த வங்கி இயங்கி வருகின்றது. இந்தக் குழுவைச் சேர்ந்த ராஜ் குமார் மாஞ்சி என்பவர் இதன் மேலாளராக உள்ளார். மாஞ்சியின் மனைவி நகினா தேவி பொருளாளராக இருக்கிறார். செயலாளராக மாலதி தேவியும், பிச்சைக்காரர்களிடம் இருந்து வார சந்தாத் தொகையை வசூல் செய்யும் முகவராக வனரிக் பஸ்வான் என்பவரும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த வங்கியில் மேலும் பல பிச்சைக்காரர்களை இணைத்து, அவர்களின் எதிர்கால சேமிப்புக்கு உதவி செய்வதே எங்கள் நோக்கம் என்கிறார் மாஞ்சி. மாநில அரசின் சமூக நலத் துறை கடந்த ஆண்டு வலியுறுத்தியதன் விளைவாக இந்த வங்கியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வங்கியினால் அடைந்த பலனைப் பற்றி குறிப்பிட்ட மாஞ்சி, ‘அண்மையில் என் மகளும், சகோதரியும் சமையல் செய்து கொண்டிருந்தபோது தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்கள். அப்போது, சிகிச்சை செலவுக்கு எங்கள் வங்கி 8 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் தந்து உதவியது. என்னைப் போன்ற பிச்சைக்காரர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியோ, தனியார் வங்கியோ உரிய உத்தரவாத நபர் இல்லாமல் கடன் கொடுக்க முன்வருவதில்லை. இதைப் போன்ற சூழலில் எங்கள் மங்கலா வங்கி பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்கிறார் அவர்.