கர்நாடகாவில் பந்திப்பூர் வனத்தில் 2 மனிதர்களை கொன்று, 14 கால்நடைகளை கொன்ற புலியை பிடிக்க மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் கர்நாடகா வனத்துறை இறங்கி உள்ளது.
தமிழகத்தின் நீலகிரி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் சரணாலயம். பந்திப்பூர் புலிகள் சரணலாயம் பெங்களூருவில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மொத்தம் 872 சதுர கிலோமீட்டர் உடைய இந்த வனப்பகுதி தமிழக மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டருக்கும் குறைவான துரத்தில் தான் இந்த வனப்பகுதி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள இந்த வனப்பகுதியில் ஒற்றை புலி ஒன்று இதுவரை இரண்டு மனிதர்களை கடித்துக் கொன்றுள்ளது. அத்துடன் வனத்தினை ஒட்டியுள்ள கிராமங்களில் 14 கால்நடைகளை அடித்து சாப்பிட்டுள்ளது.
மனிதர்களை கொன்று சாப்பிட்டு ருசி கண்ட புலியை பிடித்தே தீரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்காக கர்நாடகா வனத்துறை மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளது. வனத்துறை காவலர்கள் ஏராளமானோர் பந்திப்பூர் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கேமராக்களை நேற்று மாலை நிறுவி ஒற்றைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்களை நிறுவப்போகிறார்கள் என்று பந்திப்பூர் புலிகள் சரணாலய இயக்குனர் டி பாலச்சந்திரா கூறியுள்ளார்.
மனிதர்களை கொல்லும் புலியை பிடிப்பதில் வல்லவரான ஷபாத் அலி கானை மகாராஷ்டிராவில் இருந்து வரவழைத்துள்ளது கர்நாடகா வனத்துறை. இவர் மகாராஷ்டிராவின் அவ்னியில் புலியை சுட்டுக்கொன்றவர் ஆவார்.
இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லாமல் பிடிக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும், புலியை சுட்டுக்கொல்வதில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் அதை உயிருடன் பிடிக்க வேண்டும் என்றும் பாலசந்திரா கூறினார்.