கர்நாடகாவில் உள்ள ஒரு விவசாயி தனது நாய்க்கு புலி வேசம் போட்டு விட்டிருக்கிறார். புலியின் உடலில் இருப்பது போல் வரிவரியாக வண்ணம் தீட்டி விட்டிருக்கிறார். ஏன் தெரியுமா?!
எல்லாம் குரங்குகளின் அச்சுறுத்தலிலிருந்து தனது காபி மற்றும் அரக்கு பயிரைப் பாதுகாப்பதற்குதானாம்! இவ்வாறு செய்ததால், நாய்ப்புலியைப் பார்த்து குரங்குகள் பயப்படுகின்றனவாம். இது தமக்கு நல்ல தீர்வாக அமைந்திருக்கிறது என்று அவர் பெருமிதப் படுகிறார்.
கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ள நளூரு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கௌட தான் இவ்வாறு தனது நாயின் உடலில் புலி போல தோற்றமளிக்க கோடு போட்டு வேடம் மாற்றியிருக்கிறார்.
குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க, புலிகளின் பொம்மைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் குரங்குகள் அதற்கெல்லாம் அசரவில்லை. எனவே அசையும் உருவமாக இருப்பதற்காக, நாய்க்கு புலி வேஷம் போட முடிவு செய்தாராம்.
காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் நாய் ‘புல்புல்’ இவருடன் தோட்டத்துக்கு வரும். புலியைப் போல் நாய் இருப்பதைக் கண்டு குரங்குகள் ஓடுமாம். இதைப் பார்த்து ஆச்சரியப் பட்ட கௌட, இதே டெக்னிக்கை மற்றவர்களும் பின்பற்ற அறிவுரை கூறியுள்ளார்.
இப்போது குரங்குகள் அவரது தோட்டத்துக்கள் நுழைவதைத் தவிர்க்கின்றனவாம். கௌடவின் புலிநாய் யோசனையை இப்போது இவரது கிராமத்தில் பலரும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களும் குரங்குத் தொல்லையில் இருந்து தங்கள் தோட்டத்து பயிர்களைக் காத்துக் கொள்கின்றனராம்.