என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணியின் போது எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்.,வரை வீடு வீடாகச் சென்று தேசிய மக்கள்தொகைப் பதிவேடு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இந்தப் பணிக்காக, மக்கள் தொகை கணக்கெடுக்க வருபவர்களிடம், பொது மக்கள் ஆவணங்கள் வழங்க வேண்டும். இதற்காக பழைய ஆவணங்களை தேடிப் பிடித்து எடுக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்த ஆவணங்களை, அதிகாரிகள் பார்வையிடுவார்கள் என அதிகாரி ஒருவர் கூறியதாக நாளிதழில் செய்தி வெளியானது.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்…
என்பிஆர் பணியின் போது, உண்மை நிலையை கணக்கில் எடுத்துக் கெள்ளாமல், தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. என்பிஆர் பதிவுக்காக, ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படும். இதற்காக குடும்பங்கள் பழைய ஆவணங்களை தோண்டி எடுக்க வேண்டும். என்பிஆர் கணக்கெடுக்க வருபவர்கள் அந்த ஆவணங்களை பார்வையிடுவார்கள் என தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எந்தவொரு தனிநபரும், எந்த வித ஆவணங்களையும், என்பிஆர் ஆய்வுக்காக வரும் அதிகாரிகள் அல்லது கணக்கீட்டாளர்களிடம் வழங்க தேவையில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை அந்த செய்தி புறக்கணித்துள்ளது.
கணக்கெடுப்பின் போது, தனி நபர்கள் அளிக்கும் ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படும்… என்று கூறப் பட்டுள்ளது.