அமெரிக்கா – ஈரான் இடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 3.5% வரை உயர்ந்துள்ளது.
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா, ஈரான் நாடுகள் இடையே அண்மைக் காலமாகவே மோதல் போக்கு அதிகரித்து வந்தது. இதனிடையே, ஈரான் ராணுவ முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ட்ரோன் தாக்குதலில் கொன்றன. இதனால் ஈரானில் பெரும் பதற்றம் ஏற்பட்டு, இரு நாடுகளிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் 9 முறை இன்று காலை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 80க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பர் என்று கூறப் படுகிறது.
இந்நிலையில் போர் அபாயம் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 4 % வரை அதிகரித்து 71 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலையும் உயரும் என அஞ்சப் படுகிறது.
இதனிடையே, தங்கம், வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று சற்று விலை குறைந்திருந்த நிலையில் புதன்கிழமை இன்று சவரன் ரூ.525 அதிகரித்து, மீண்டும் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் தங்கம் – வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.66 உயர்ந்து ரூ.3,929க்கும், சவரன் ரூ.528 அதிகரித்து ரூ.31,432க்கும், 24காரட் 10 கிராம் ரூ.41,220க்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலையும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.1.40 காசு உயர்ந்து ரூ.52.60க்கு விற்பனை ஆனது.