மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 3 மருத்துவமனைகளை நாடிய நிறைமாத கர்ப்பிணி பெண், சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில், கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.
மும்பை புறநகர் பகுதியான நாலா சோபாராவைச் சேர்ந்தவர் 27 வயது நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு ஏப்ரல் 8 பிரசவத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 3ம் தேதி இரவு மூச்சு விட சிரமப்பட்டுள்ளார். அடுத்த 12 மணி நேரம் அவர் கணவர், கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு, ஆட்டோவில் 70 கி.மீ பயணம் செய்து, மூன்று மருத்துவமனைகளில் ஏறி இறங்கியும், சிகிச்சை கிடைக்காததால், அடுத்த நாள் மதியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முதலில் அருகிலுள்ள நர்ஸிங் ஹோமை நாடியுள்ளனர். கொரோனா இருக்கலாம் என சந்தேகப்பட்டு, அங்கிருந்த மருத்துவர் அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து, அரசு நடத்தும் சர்வோதயா மகப்பேறு இல்லத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தங்களிடம் சிகிச்சை அளிக்க போதுமான வசதியில்லை என அவர்களும் அனுப்பிவிட்டதாகவும், ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்யவில்லை என்கிறார். அதிகாலை 2.30 மணிக்கு 40 கி.மீ பயணித்து, மும்பையிலுள்ள சதாப்தி மருத்துவமனையை அணுகியுள்ளனர்.
அங்கு கர்ப்பிணியை பரிசோதித்த மருத்துவர்கள், நூரையீரலில் நீர் இருப்பதை கண்டறிந்து, 30 கி.மீ தொலைவில் உள்ள நாயர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில், கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக அவர் இறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த குடிசைப்பகுதியை நகராட்சி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
யார் யாருடன் கர்ப்பிணி பெண் தொடர்பில் இருந்தார் என்ற தகவல்களை சேகரிக்க, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் சென்றுள்ளனர்.
அவர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக வந்துள்ளதாக நினைத்துக் கொண்டு, அப்பகுதியினர் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து, கர்ப்பிணி பெண் வீட்டிற்கு அருகில் இருந்த 32 வீட்டினரை தனிமை முகாமிற்கு மாற்றுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். எவ்வாறு கர்ப்பிணிக்கு தொற்று ஏற்ப்பட்டிருக்கும் என்பதை விசாரித்து வருகின்றனர்.