கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் சென்று, மிகச் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று, உலக நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது. மேலும், இந்தியாவுக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்கி பாராட்டும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் மிக விரைவாகப் பரவி வரும் தொற்று நோய் வைரஸ் கிருமியான கோவிட் 19, பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து வேலைசெய்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிராக, உலக நாடுகள் எவ்வாறு பதிலடிகொடுத்து, தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறித்து, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்தது.
ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின் பிளேவட்னிக் கல்லூரி ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடல், பயணத் தடைகள் விதித்தல், சுகாதாரத்துறையில் அவசர முதலீடுகள், நிதி மேலாண்மை, தடுப்பூசிகள் கண்டுபிடிக்க முதலீடுகள், பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்தல், விழிப்புணர்வு பிரசாரங்கள், போக்குவரத்து கட்டுப்பாடுகள், பரிசோதனைக் கொள்கை, தொற்றுக்கு ஆளானவர்களின் தடம் அறிதல் என 13 அம்சங்களின் அடிப்படையில் உலக நாடுகளின் நிலவரம் கருத்தில் கொள்ளப்பட்டது.
இந்தியா உள்ளிட்ட 73 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளையெல்லாம் இந்தியா பின்னுக்குத் தள்ளி முதன்மை பெற்றது.
கொரோனா வைரசுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ள நாடு இந்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போன்று இஸ்ரேல், மொரீசியஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றன.
செக் குடியரசு, இத்தாலி, லெபனான் ஆகிய நாடுகள் 90 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுள்ளன. ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் 70-80 மதிப்பெண்கள் பெற்றுள்ளன.
இது குறித்து இந்த ஆய்வினை மேற்கொண்ட
பேராசிரியர் தாமஸ் ஹாலே குழு குறிப்பிடுகையில், “இந்த ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் சேகரித்து அளித்துள்ள தரவுகள், முடிவு எடுப்பவர்களுக்கும் (அரசாங்கங்கள்), பொது சுகாதார நிபுணர்களுக்கும் மேலும் ஆய்வு மேற்கொள்ள வசதியாக இருக்கும். கொரோனா வைரசுக்கு எதிரான அரசாங்கங்களின் நடவடிக்கைகள் பயனுள்ளவையாக இருந்தன என்று புரிந்து கொள்வதற்கான முதல் தரவுகளை எங்கள் ஆய்வு அளித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் சீனாவில் வெளியான உடனேயே, இந்திய அரசு அவசரக் கூட்டம் நடத்தி, இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் இருக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெளிநாடுகளில் வசித்த இந்தியர்கள், கல்வி பயிலச் சென்ற மாணவர்கள் என அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டு, அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டனர். மத்திய அரசின் விழிப்புடன் கூடிய நடவடிக்கைகளால், சமூகப் பரவல் கட்டுப் படுத்தப் பட்டது.
பிரதமர் 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். பொது போக்குவரத்து முடங்கியது! ஏழை எளியோருக்கு ஊரடங்கு காலத்தில் பட்டினி கிடக்கும் நிலை வராமல் இருக்க உணவு தானியங்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அறிவித்து ரேஷன் கடைகள் மற்றும் பொது வழங்கல் மூலம் வழங்கத் தொடங்கியது… இந்திய அரசின் இந்த துரிதமான நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பல நாடுகளையும் வெகுவாகக் கவர்ந்தன.