ஒருவருக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டால் அவர் அதிகபட்சமாக 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். 28 நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால், அவர் கரோனா பாதிப்பு இல்லாதவர் என்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்.
ஆனால், 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது சரியானதுதானா? என்று கேட்டால் இல்லை என்பதே தற்போதைய பதிலாகக் கிடைத்துள்ளது.
துபையில் இருந்து திரும்பிய கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 29வது நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதிவிலக்கான சில கொரோனா தொற்று பாதிப்புகளால், மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். துபாயில் இருந்து கோழிக்கோட்டில் உள்ள எடசேரி பகுதியில் தங்களது வீட்டுக்கு வந்த இரண்டு சகோதரர்களில் ஒருவர்தான் தற்போது 29வது நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர். இவர்கள் வீட்டில் இருந்து நேராக தனிமைப்படுத்தும் மையத்துக்குச் சென்றுவிட்டனர்.
ஆனால், இவர்களது 67 வயது தந்தை, உடல் நலப் பிரச்சினையால் மருதுவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் ஏப்ரல் 11-ம் தேதி அவருக்குக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி, பேரப்பிள்ளை, ஒரு மகனுக்கும் கொரோனா உறுதியானது. மறறொரு மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனை செய்யப்பட்டு வந்ததில், 29வது நாளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எடசேரி நபருக்கு கொரோனா பாதிப்பு மிக வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இதன் மூலம், 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகும், ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீடு திரும்பும் நபர்கள், மேலும் ஒரு வாரம் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.