முகக் கவசம் அணியாவிட்டால் ரூ. 1000 ஸ்பாட் பைன்: தெலங்கானா அதிரடி
கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என தெலங்கானா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இம்மாநிலத்தில் இம்மாதம் 29-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி, சில தொழிற்சாலைகளை இயக்கவும் அம் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள், ஹெல்மெட்அணிவதைப் போல், முகக் கவசத்தையும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், இவ்வாறு இல்லாவிட்டால் உடனடியாக அபராதமாக ரூ. 1000 வசூல் செய்யவும் அம்மாநில காவல்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு அந்த அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ஸ்பாட் பைனாக ரூ. 1000 விதிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது முகக் கவசம் இல்லாதவரையும் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் காவல்துறையினரின் கருவூலத்தில் இனி காசு-பணம்-துட்டு நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எல்லாவற்றிலும் நாங்களே முன்னோடி என மார்த் தட்டிக் கொள்ளும் தமிழக அரசு, தெலங்கானா மாநிலத்தை இந்த விசயத்தில் பின்பற்றுமா என்பது போகப்போக தெரியவரும்.