யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. பாரீஸ், வியன்னா, பிரேசல்ஸ், ரோம், எடின்பர்க் ஆகிய புகழ்பெற்ற நகரங்கள் அடங்கிய புராதன நகரங்கள் பட்டியலில் ஆமதாபாத்தும் இணைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமதாபாத் நகரம், சுல்தான் அகமது ஷா என்பவரால் உருவாக்கப்பட்டது.
இதுகுறித்து, பாரம்பரியச் சின்னங்களை ஆய்வு செய்யும் தில்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோகைல் ஹாஸ்மி தெரிவித்தபோது, “இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தங்களுடைய பாரம்பரியத்தை பேணி வருகின்றன. தற்போது ஆமதாபாத் புராதன நகராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால், இதை விட பழைமை வாய்ந்த தில்லி, மும்பை, பாட்னா, அலாகாபாத், மதுரை ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்” என்றார்.