இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்ட கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குக்காக அவரைக் கைது செய்ய இந்திய தரப்பில் முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், விஜய் மல்லையாவை (61) இங்கிலாந்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். எனினும், நீதிமன்றம் ஜாமீன் அளித்தததால், அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
விஜய் மல்லையா உள்ளிட்டோர் மீது சிபிஐ., அமலாக்கத் துறை என வெவ்வேறு அமைப்புகள், தனித்தனியே வழக்குகளைப் பதிவு செய்துள்ளன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மல்லையாவுக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நாட்டை விட்டு தப்பிச் சென்று, லண்டனில் தஞ்சம் புகுந்தார் மல்லையா.
இதை அடுத்து, தங்களின் விசாரணைக்காக லண்டனில் இருக்கும் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ., அமலாக்கத் துறை ஆகியவை முயற்சி மேற்கொண்டுள்ளன. இந் நிலையில், பிரிட்டன் அரசிடம் மல்லையாவை திருப்பி அனுப்பக் கோரி, நாடு கடத்துதல் தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அரசு வேண்டுகோளை முன் வைத்தது. இந்த வேண்டுகோளை ஏற்று, பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார், விஜய் மல்லையாவை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். ஆனால், உடனேயே வெஸ்ட்மின்ஸ்டர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மல்லையாவுக்கு ஜாமீன் அளித்தார்.
இத்தகைய சூழ்நிலையில், மீண்டும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத் துறை ஒரு வழக்கு பதிவு செய்து அது குறித்த தகவலை பகிர்ந்தது. இந்த வழக்கில், விஜய் மல்லையாவை லண்டனில் வைத்து அந்நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேற்று கைது செய்தனர். முன்னர் நடந்தது போலவே, வெஸ்ட்மின்ஸ்டர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி, சில நிபந்தனைகளை விதித்து, மல்லையாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
இந்தத் தகவல் வெளியானதும், ஜாமீன் பெறுவதற்காகவே மல்லையாவைக் கைது செய்கிறார்கள் போலும் என்று நெட்டிசன்கள் கருத்து மழை பொழிந்து வருகின்றனர்.